Tuesday 22 November 2011

ஜெயகாந்தன்

                    உங்களைப் பெரிதும் பாதித்த தமிழ் எழுத்தாளர் என்று எவரைக் குறிப்பிடுவீர்கள் ? ஏன்? எப்படி ? என்பதைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள் .
       உடனடியாகச் சொல்வதென்றால் ஜெயகாந்தனைத், தான் என்னால் சொல்ல முடியும் .கல்கி,அகிலன் ,நா.பார்த்தசாரதி என்று தொடங்கி என் இளமைக்காலத்தில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களை நான் படித்திருக்கிறேன் என்ற போதிலும் ஜெயகாந்தன் தான் எனக்கான இலக்கிய உணர்வு, கலை உணர்வு,  முதலியவற்றுக்கெல்லாம் காரணமாக, இன்னும் சரியாகச் சொன்னால் ஆதாரமாக இருந்திருக்கிறார் . மார்ச்சிய உணர்வில் எனக்குள் உறுதி ஏற்பட்ட அந்தக் காலச்சூழலில் ஜெயகாந்தன் தான் எனக்குள் முழுமையாக இடம் பெற்றார்.

     இரகுநாதனோ டி.செல்வராஜோ எனக்குப் போதுமானவராக இல்லை ,பெரியாரோடு அவர் நடத்திய விவாதத்தில் நான் ஜெயகாந்தனுக்குத்தான் நெருக்கமாக இருந்தேன் ."அக்னிப்பிரவேசம்" என்ற சிறுகதை தமிழகச் சூழலில் கடுமையான விவாதங்களைக் கிளப்பிய போது ஜெயகாந்தனின் பார்வைதான் எனக்கு இசைவாக இருந்தது . ரிசிமூலம் ,பிரளயங்கள் , சமூகம் என்பது நாலுபேர்,முதலிய குறுநாவல்களை ஜெயகாந்தன் தந்த போது என்னை முழுமையாகவே ஜெயகாந்தன் ஆக்கிரமித்துக் கொண்டார் என்று என்னால் சொல்ல முடியும் .நம் சமூகச் சூழலில் காமம் என்ற உணர்வு,அதை சரியாக அணுக இயலாத நிலையில்  மனித ஆளுமைக்குள் எத்தகைய சிதைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பது பற்றிய ஜெயகாந்தனின் புரிதல், எனக்குள் ஒரு பெரிய வெளிச்சமாக வந்து சேர்ந்தது .

      நவீன  கால அரசியலுக்கும் சமதர்மம் என்ற பொருளியலுக்கும் இந்திய மெய்யியல் மற்றும் தமிழ் மெய்யியலுக்கும் ஒப்பற்ற இணைப்பு புள்ளியாகவும் நவீன உலக பார்வைக்கு ஒரு திறப்பாகவும் விளங்கிய பாரதிதான் நமக்கான பேராசான் என்ற முறையில் பாரதியை தனக்கு ஆசானாக வரித்துக்   கொண்டவர் ஜெயகாந்தன் .திரும்பத்திரும்ப பாரதி பற்றி ஓயாமல் ஜெயகாந்தன் முழங்கிய போது நான் மட்டுமல்லாமல் எத்தனையோ தமிழ் உணர்வாளர்கள் ஜெயகாந்தன் மூலம் பாரதியை ஒரு தரிசனம் போல எங்களுக்குள் பத்திரப்படுத்தினோம் .
      ஜெயகாந்தனைப் பற்றி நானும் சில கட்டுரை எழுதியுள்ளேன் .தமிழகத்தில் திருவள்ளுவர் தொடங்கி திருமூலர் தாயுமானவர் ,வள்ளலார் ,வரையில் தொடரும் ஆற்றல் மிகுந்த சித்தர் மரபில் இன்னொரு விளைச்சல் எனப் புதுமைப்பித்தனோடு  ஜெயகாந்தனையும் நான் மதிப்பிட்டு எழுதிய கட்டுரை ஜெயகாந்தனுக்குள் என்றும் அழியாத தமிழ்மரபின் வீச்சை எடுத்துரைக்கிறது .ஜெயகாந்தன் படைப்புகளிலும் சித்தர்கள் எத்தனையோ வடிவங்களில் ஓயாமல் தொடர்வதைத் தமிழ் வாசகர் உணரமுடியும்.

           ஜெயகாந்தன் மார்க்சியராக இருந்து கொண்டே ஆன்மீகம் பற்றியும் ஆழமாகப் பேசினார் .கட்சி மார்க்சியர் அவரைத் தாக்கவும் செய்தனர் லெனின் சமாதியில் ஜெயகாந்தன் தலைக்கு மேல் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு சுற்றி வந்ததை  என்னால் ஏற்க முடிந்தது .
       இளமைக் காலத்தில் எனக்குள்ளும் வீறியத்தோடு சமய உணர்வு இருந்தது . பின்னர் சமயத்தின் புறக் கூறுகளான கோவில் வழிபாடு சடங்குகள் முதலியவற்றை நான் உதறிக் கொண்ட பின்னரும் எனக்குள் சமயத்தின் அகக்கூறான ஆன்மீக உணர்வு இயல்பாகவே தங்கியது .மார்க்சியம் குறிப்பிடும் சமதர்மம் என்ற உணர்வுக்கு இந்த ஆன்மீக உணர்வு நெருக்கமாக இருந்தது .ஜெயகாந்தன் கருதியது போல நானும் மார்க்சியத்திற்கு நெருக்கமாக இந்த ஆன்மீக உணர்வைக் கண்டு கொண்டேன் . மார்க்சியம் எனக்குள் மேலும் உறுதி பெறுவதற்கு இவ்வகையில் ஜெயகாந்தன் காரணமாக ஆகியிருக்கிறார்
       ."ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் " என்ற நாவலில் ஹென்றியை என்னால் எளிதாக ஏற்க முடிந்தது .ஜெயகாந்தன் பார்வையில் ஹென்றி இயேசுவின் இன்னொரு பிறப்பு .இலக்கண மீறிய கவிதை முதலிய படைப்புகளில் ஜெயகாந்தன் முன்வைத்த பெண்ணைப் பற்றிய பார்வை தமிழிலக்கியத்திற்கு முற்றிலுமான ஒரு புதிய பார்வை .வேசி என்று எந்தப் பெண்ணையும் ஜெயகாந்தனால் குறைத்துப் பேசவே முடியாது . எந்தப் பெண்ணிற்குள்ளும்  உள்ள தாய்மை உணர்வு வணக்கத்திற்குரியது . " ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் " நாவலில் கல்யாணியின் கலை உணர்வை அழகியலுணர்வை,முதன் முறையாக நான் புரிந்து கொண்டு கொண்டாடினேன். ரங்கனின் பார்வை வரட்டுத்தனமான கம்யூனிஸ்ட்டின்  பார்வை. கங்கை எங்கே போகிறாள் . நாவலில் கங்கை ஆற்றில் தன்னை சங்கமமாக்கிக் கொண்ட கங்கா எனக்குள் ஒரு பேரதிர்வை ஏற்படுத்தினாள். புரியாத காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட "விபத்தை " புரிந்து கொள்ளாமல், உறவினர்களும் மற்றவர்களும் ஒரு பெண்ணைத் தண்டிக்க தொடங்கினால் அவளுக்குள் எத்தகைய திரிவும் இறுக்கமும் ஏற்பட்டு இறுதியில் அவளுக்கு என்ன நேரும் என்பதை கங்கா  என்ற அற்புத படைப்பில் ஜெயகாந்தன் பெண்பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறார் .பெண்ணியம் பற்றி ஜெயகாந்தன் வெளிப்படையாகப் பேசவில்லை என்பது போலவே தலித்தியம் பற்றியும் ஜெயகாந்தன் பேசவில்லை என்பதெல்லாம் எத்தகைய தவறான கருத்து என்பதற்கு ஜெயகாந்தன் படைப்புகளே சான்றாகின்றன
   .'ஜெயஜெய சங்கர ' நாவலில் சங்கராச்சாரியரை ஜெயகாந்தன் கொண்டாடுகிறார் என்று பலர் சாடும் குறை  படைப்பென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களுடைய அப்பாவித்தனமான பார்வை . இந்தக் குறுநாவலில் இடம்பெறும் சங்கரர் ஜெயகாந்தனுடைய சங்கரர் இவர் சங்கராச்சாரியார் இல்லை.
  விகடனில் ஜெயகாந்தன் எழுதத் தொடங்கியது முதற்கொண்டே மார்க்சியத்திலிருந்து விலகி தமக்குள் முதலாளியச் சார்பை மேற்கொண்டார் என்று  சிலர் கடுமையாகச் சாடியதை நான் ஏற்கவில்லை .ஜெயகாந்தன் படைத்த பிரபு முதலிய முதலாளிகளை முன்வைத்து இப்படி ஒரு குற்றசாட்டை முன்வைக்க முடியுமானால், கார்க்கியின் படைப்பிலும் இத்தகை மனிதனைக் காணமுடியும்.முதலாளியம் ஒரு மனிதனை எப்படிச் சீர்குலைக்கிறது என்பதற்கு  பிரபு  ஒரு சான்று .
   ஜெயகாந்தன் படைப்புகளில் ஜெயகாந்தனே எல்லாப்  பாத்திரங்களுக்குள்ளிருந்தும்  பேசுகிறார் என்று பலரும் முன்வைக்கும் ஒரு குற்றசாட்டு எனக்கு உடன்பாடில்லை .முரண்பாடுகளுக்கிடையில் அவதிப்படும் தமிழர்களின் மனச்சான்றுக்குள்ளிருந்து ஜெயகாந்தன் உரத்த குரலில் தன் பாத்திரங்கள் மூலம் பேசுகிறார் என்பது என் புரிதல் .

         இவ்வளவும் சொன்னபிறகு ஜெயகாந்தனின் அண்மைக்காலம் பற்றிச் சொல்லவேண்டும் .ஜெயகாந்தன் தொடர்ந்து படைக்கவில்லை என்று நான் கூறமாட்டேன் .அவர் படைத்தவை போதுமென்றும்  நான் கருதமாட்டேன் .படைப்பியக்கம் எப்படியோ அவருக்குள் தளர்ந்து விட்டது . ஒரு படைப்பாளி எவ்வளவு காலத்திற்குத்தான் வீரியத்தோடு இயங்க முடியும்? .தமிழ்ச்சமூகத்தில் அவருக்கு நிகராக அவரளவுக்கு வீரியத்தோடு இயங்கிய எழுத்தாளர் இன்னொருவரில்லை .தமிழ் சமூகத்தில் எல்லாக் களங்களினுள்ளும்  பேராற்றலோடும் பெருமிதத்தோடும் இயங்கினார் .இவரை ஆழ்ந்து கற்காதவர்கள் அவரைப் பற்றித்தொடர்ந்து அவதூறுகள் கிளப்பினர் என்று தான் என்னால் சொல்ல முடியும் .
     கடந்த சில ஆண்டுகளில்  அவரது இயக்கம் எனக்கு உடன்பாடாக இல்லை . அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய போது அமெரிக்காவில் சோசலிசம் வாழ்கிறது என்றார் .எல்லா வகையிலும் சீர்கெட்ட ஜெயந்திரரை அவர் பார்த்துப் பேசியதாகவும்  சொன்னார்கள் .உடல் நோயுற்ற போது கலைஞருக்கு நெருக்கமானார் இவையெல்லாம் ஜெயகாந்தனுக்கு மரியாதை தருவதாக  இல்லை என்ற போதிலும் ஜெயகாந்தனும் ஒரு மனிதர் என்ற முறையில் அவரைப் புரிந்து கொள்ள நாம் மறுக்க முடியாது .

           கடைசியாக ஓன்று ஜெயகாந்தனை எத்தனை மேடைகளில் பார்த்து நான் இரசித்திருக்கிறேன் .நேரிலும் அவரை சிலமுறை நான் சந்தித்திருக்கிறேன் .ஆழ்வார் பேட்டையில் ஒரு சமயம் நண்பர் சூழ, அவர் அவருக்கேயான தோரணையில் உரையாடல் நிகழ்த்திய போது அவர் முகத்தின் பேரொளிப் பிளம்பு கண்டு பெரும் வியப்புற்றிருக்கிறேன் . என்னிடத்தில் பேரன்பும் மரியாதையும் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார் . "விஷ்ணு புரம்" நாவல் என்னதான் சொல்கிறது என்று என்னிடம் கேட்டு நான் நெடுநேரம் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தார் . டங்கல் திட்டம் குறித்து எவ்வளவு பேசினாலும் என் கருத்தை அவர் ஏற்காமல்  டங்கல் திட்டத்தை அவர் உறுதியாகச் சார்ந்தே பேசிக்கொண்டு இருந்தார் . அவர் கருத்தை என்னால் மாற்றத்தான் முடியவில்லை .
   கோவையிலிருந்து சென்ற நண்பர் ஒருவர் தலித்தியம் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை என்று கேட்டபொழுது, கோவையில் "நீங்கள் ஞானியைக் கேளுங்கள் " என்று சொல்லி அனுப்பினார் . இன்று அவர் எப்படி இருந்த போதிலும் ஜெயகாந்தனைப் பற்றிய என் பிரமிப்பு  என்றும் குறையாது .அவர் என் ஆளுமைக்குள் கலந்துவிட்டவர் .

          ஜெயகாந்தனைச் சுற்றி ஓயாமல் வலம் வந்த ஒரு கும்பல், ஜெயகாந்தனிடமிருந்து என்னை விலக்கியே வைத்திருந்தது என்பதை என்னால் குறிப்பிடாமல்  இருக்க முடியவில்லை .

             நகராட்சி கலையரங்கில் நடந்த ஒரு கூட்டத்திற்கு வந்த ஜெயகாந்தன், காரிலிருந்து இறங்கிய போது, ,அரங்குக்கு வெளியில் நண்பர்களோடு அமர்ந்திருந்த என்னைப் பார்த்து என்னை நெருங்கி வந்து  கண்பார்வை இல்லாத என்னிடம் "வணக்கம் நான் ஜெயகாந்தன்" என்று கூறிய ஜெயகாந்தன் அவர்களின் பெரும் கருணையை எப்படி என்னால் மறக்க முடியும் !

           தமிழில் அகிலனுக்குப் பிறகு ஞான பீட  பரிசு பெறுவதற்கு தமிழுக்குத் தகுதியில்லை என்ற முறையில் தமிழ் இலக்கியத்தின் மீது மரியாதை செலுத்தாத ஞானபீட  நிறுவனம், ஜெயகாந்தனுக்கு ஞானபீட பரிசை வழங்கியதன் மூலம் தன்னை மரியாதைக்குரிய நிறுவனமாகச் செய்து கொண்டதோடு, தமிழிலக்கியத்தின் மீதான மரியாதையை தமிழராகிய நாம் மீட்டுக் கொண்டதற்காக ஜெயகாந்தனுக்கு நன்றி செலுத்த வேண்டும் ..



6 comments:

  1. ஜெயகாந்தனுக்கு ஞானபீட பரிசை வழங்கியதன் மூலம் தன்னை மரியாதைக்குரிய நிறுவனமாகச் செய்து கொண்டதோடு, தமிழிலக்கியத்தின் மீதான மரியாதையை தமிழராகிய நாம் மீட்டுக் கொண்டதற்காக ஜெயகாந்தனுக்கு நன்றி செலுத்த வேண்டும் ..
    ஜெயகாந்தன் குறித்த அற்புதமான பகிர்விற்கு உங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கா எங்கே போகிறாள் என்ற அவரது இரண்டு நாவல்களும் என்னை மிகவும் ஈர்த்தன. அறியா வயதில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் விபத்தைப் புரிந்து கொள்ளாமல் அவளுக்குத் தண்டனை வழங்கும் இக்கதை என்னை மிகவும் பாதித்தது.
    சமீபத்தில் ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம் படித்தேன். ஹென்றியின் பாத்திரம் அக்காலத்தில் புதுமையானதாய் இருந்திருக்கலாம். இக்காலக்கட்டத்தில் அது என்னை ஈர்க்கவில்லை.

    ஜெயகாந்தன் பற்றி அருமையான ஒரு பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  4. "பெண்ணுக்கு ஏற்படும் விபத்தைப்"-women in passive voice
    "ஆ ணுக்கு ஏற்படும் விபத்தைப்"?
    "ஆண் ஏற்படுத்தும் விபத்தை"? - men in active voice

    புரியாத காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட "விபத்தை " புரிந்து கொள்ளாமல், உறவினர்களும் மற்றவர்களும் ஒரு பெண்ணைத் தண்டிக்க தொடங்கினால்
    அவளுக்கு என்ன நேரும் என்பதை கங்கா என்ற அற்புத படைப்பில் ஜெயகாந்தன் பெண்பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறார்

    புரியாத காலத்தில் ஒரு ""16 வயது ஆணும் 16 வயது பெண்ணும்" ஏற்பட்ட "விபத்தை " புரிந்து கொள்ளாமல், உறவினர்களும் மற்றவர்களும் சட்டமும், சமூகமும், பெண்ணியவாதிகளும் ஒரு ஆணை தண்டிக்க தொடங்கினால்
    அவனுக்கு என்ன நேரும் என்பதை எந்த அற்புத படைப்பில் ஜெயகாந்தன் ஆண் பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறார் ?

    ReplyDelete
  5. conveniently objectifying women in sexual crimes, in order to criminalize men is feminist core ideology.
    Keeping women in passive voice
    Keeping men active voice
    பாலியல், -ஆணின் தேவை -பெண்ணின் சேவை.
    எனும் GYNOCENTRIC உளவியலின் தர்க்க வெளிப்பாடு.

    ReplyDelete
  6. தொடர்ந்து காலம் காலமாக ஆண்மை என கட்டமைக்கப்படும் கற்பிததங்கள்
    கலை முதல் காப்பியம் வரை பெண்மையை கற்சிலை முதல் காப்பிய நாயகி வரை கட்டமைப்பதில் தங்களின் திறனை வெளிப்படுத்தும் போக்கினால் கட்டமைக்கப்பட்டு வரும் பொய் பிம்பம்.
    காலத்திற்கு ஏற்ப மாறுபடும் கண்ணகியும்/கங்காயும், மறுபடாத பெண்மையத்தில் வெளிப்படுத்தப்படும் இலக்கிய ஆண்மை/ஆளுமைகள்.

    ReplyDelete